திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.98 உள்ளம் - திருக்குறுந்தொகை
நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை
ஆற லைக்கநின் றாடும் அமுதினைத்
தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர்
ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
1
பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடுந்
தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியைச்
சிந்தை யைத்தெளி வைத்தெளி வாய்த்ததோர்
எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
2
வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே
வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார்
கள்ளத் தைக்கழி யம்மன மொன்றிநின்
றுள்ளத் தில்லொளி யைக்கண்ட துள்ளமே.
3
அம்மா னையமு தின்னமு தேயென்று
தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழுஞ்
செம்மா னநிறம் போல்வதோர் சிந்தையுள்
எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
4
கூறே றும்முமை பாகமோர் பாலராய்
ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர்
பாறே றுந்தலை யேந்திப் பலஇலம்
ஏறேறு மெந்தையைக் கண்டதெ னுள்ளமே.
5
முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
தன்னெஞ் சந்தமக் குத்தாம் இலாதவர்
வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லீரே
என்னெஞ்சி லீசனைக் கண்டதெ னுள்ளமே.
6
வென்றா லைப்புல னைந்துமென தீவினை
கொன்றா னைக்குணத் தாலே வணங்கிட
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
7
மருவி னைமட நெஞ்சம் மனம்புகுங்
குருவி னைக்குண்த் தாலே வணங்கிடுந்
திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற
உருவி னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
8
தேச னைத்திரு மால்பிர மன்செயும்
பூச னைப்புண ரிற்புணர் வாயதோர்
நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற
ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
9
வெறுத்தா னைம்புல னும்பிர மன்றலை
அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக்
கறுத்தா னைக்காலி னில்விர லொன்றினால்
ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com